ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு – அண்ணாமலை பேட்டி
1 min read
My position is that the governor should not talk about politics – Annamalai interview
5.7.2023
ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு என்று அண்ணாமலை கூறினார். கவர்னர் அரசை விமர்சிப்பது மரபு அல்ல என்றும் கூறினார்.
அண்ணாமலை பேட்டி
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்திப்பது குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக ஆளுநர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தால் என்னை விட மகிழ்ச்சியான ஆள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. தி.மு.க.வின் வண்டவாளம், தண்டவாளம் வெளியே வரும். ஆனால் சந்திக்கக் கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு. காரணம் என்னவென்றால், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது.
இதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆளுநர் நேர்மையான முறையில் விமர்சிக்க வேண்டியது சட்டசபையில்தான். சட்டசபையில் விமர்சித்துக் கொள்ளலாம். ஆளுநர் என்பவர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கலாம். ஆனால் ஆளுநர் தினம் தினம் என்னைப் போல சந்தித்து பேட்டி கொடுத்தால், அந்த பதவிக்கு மாண்பில்லாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.