June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி தொகுதி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண நீதிமன்றம் உத்தரவு

1 min read

Court orders recount of Tenkasi constituency postal votes

2021 சட்டமன்ற தே ர்தலில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி, முடிவை அறிவிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழனிநாடார் வெற்றி

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.பழனி நாடார் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் எஸ் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் எஸ் பழனி நாடார் வெற்றி பெற்றார். தென்காசி சட்டசபை தொகுதியில் தேர்தலில் தபால் ஓட்டு மொத்தம் சுமார் 1900 ஓட்டுகள் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளதாக வும் பதிவான வாக்குகளை விட அதிக எண்ணிக்கையில் வாக்குகள் கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.பழனி நாடாரின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.எனவே தபால் வாக்குகளையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த தேர்தல் வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன் 2021 சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் நடைபெற்ற தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளது ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர், 10 நாட்களில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும். மேலும், வழக்குச் செலவாக 10 ஆயிரம் ரூபாயை வழக்கு தொடர்ந்த அதிமுக வேட்பாளர் எஸ்.செல்வமோகன் தாஸ் பாண்டியனுக்கு தேர்தல் அதிகாரி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு தென்காசி சட்டமன்றத் தொகுதியில் அனைத்து அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.