அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு, நாளைக்கு ஒத்திவைப்பு
1 min read
Minister Senthil Balaji case adjourned to tomorrow
6.7.2023
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.
நேற்று முன்தினம் இந்த வழக்கில் நீதிபதிகள் இருவரும் தீர்ப்பு வழங்கினார்கள். 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். நீதிபதி நிஷாபானு தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதும் சட்டவிரோதம். அவர் உடனடியாக விடுவிக் கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தார்.
நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை. அவர் 10 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் எனக்கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார்.
3-வது நீதிபதி
2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கை 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட தலைமை நீதிபதிக்கு, நீதிபதிகள் இருவரும் பரிந்துரை செய்தனர். அதன்படி இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று பிற்பகலில் நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாட உள்ளதால் இந்த வழக்கை நாளை விசாரணைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதி, இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்தால் வரும் சனிக்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தார்.