கவர்னர் மீது முதல் அமைச்சர் கூறும் 15 குற்றச்சாட்டுகள்
1 min read
15 allegations made by the first minister against the governor
9.7.2023
ஆளுநர் – திமுக அரசு இடையே பனிப்போர் முற்றிவரும் நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசு தலைவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள 15 பக்க கடிதத்தில் 15 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குற்றச்சாட்டுகள்
ஆளுநர் – திமுக அரசு இடையே பனிப்போர் முற்றிவரும் நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசு தலைவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 பக்கம் கடிதம் எழுதியுள்ளார். அதில். ஆளுநர் ஆர்.என்.ரவி மீது 15 குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதன் விவரம்:
ஆர்.என்.ரவி வெளிப்படையாகத் தமிழக அரசின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு, தமிழக அரசும், சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையில்லாமல் காலதாமதம் செய்து வருகிறார்.
உயர் பதவிகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆர்.என்.ரவி விரும்பத்தகாத, பிளவுபடுத்தும், மதரீதியான கருத்துக்களைப் பொது வெளியில் பரப்பி வருவது அவரது ஆளுநர் பதவிக்குப் பொருத்தமற்றது.
ஆளுநர் ஆர்.என். ரவியின் தேவையற்ற அறிக்கைகள், பேச்சுக்கள் தமிழ் மக்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது.
தமிழக மக்களுக்கு எது நல்லது என்பதை முடிவு செய்ய ஆர்.என். ரவி, தமிழகத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்பதை அவர் மறந்துவிட்டார்.
திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று ஆர்.என். ரவி கூறியிருப்பது அவதூறானது மட்டுமல்ல; அது அறியாமையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுமாகும்.
தமிழ்நாடு” என்ற பெயரை, “தமிழகம்” என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கவியலாத அதிர்ச்சியை அளிக்கும் கருத்தைத் ஆளுநர் தெரிவித்தார்.
முதலீடுகளை ஈர்க்க நான் பயணம் மேற்கொண்டிருந்தபோது, வெளிநாட்டுப் பயணங்களால் முதலீடுகள் வருவதில்லை என்று சீண்டுவதுபோல ஆளுநர் குறிப்பிட்டார்.
சிதம்பரம் குழந்தைத் திருமணம் தொடர்பான ஆளுநரின் அறிக்கை காவல்துறையினரின் நியாயமான விசாரணைக்கு இடையூறாக இருந்தது.
குற்றவியல் விசாரணைக்கு இடையூறாக ஒரு சாதாரண நபர் வெளியிட்டிருந்தால், அந்த நபர் மீது உரிய காவல்துறையினர் நிச்சயம் வழக்குப்பதிவு செய்திருப்பார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தனது நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் பதவியை ஆர்.என்.ரவி சிறுமைப்படுத்தியுள்ளார்.
அரசியல் அமைப்பின் 159-ஆவது பிரிவின்கீழ் எடுத்த உறுதிமொழியை ஆளுநர் ஆர்.என். ரவி மீறியுள்ளார்.
ஆர்.என்.ரவி, வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிட்டு, மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்.
தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள்மூலம், தான் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை ஆர்.என்.ரவி நிரூபித்துள்ளார்.