ஆலங்குளத்தில் புதிதாக, காமராஜர் வெண்கல சிலை திறப்பு விழா 15-ந்தேதி நடக்கிறது
1 min read
Newly in Alankulam, Kamaraj bronze statue unveiling ceremony will be held on 15th
12.7.2023
4 வழிச்சாலை பணிக்காக ஆலங்குளத்தில் காமராஜர் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது. இதனை அடுத்து புதிதாக, காமராஜர் வெண்கல சிலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா 15-ந்தேதி நடக்கிறது.
காமராஜர் சிலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 9 அடி உயரம் மற்றும் 680 கிலோ எடை கொண்ட காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை மேளதாளங்கள் முழங்க அதன் பீடத்தில் நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழா வருகிற 15 -ந்தேதி தேதி நடைபெறுகிறது.
காமராஜர் சிலை நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் ஆலங்குளம் பஸ் நிலையம் எதிரே ஏற்கனவே உள்ள காமராஜர் சிலையானது 4 வழிச்சாலை பணிக்காக அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆலங்குளம் பஸ் நிலையத்தின் கீழ்புறம் இருந்த வேன் ஸ்டாண்ட் இருந்த பகுதியில் காமராஜர் சிலை மாற்றி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு ஆர்.டி.ஓ. மற்றும் அரசு அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் சிலை நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
வருகிற 15-ந்தேதி காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய காமராஜர் சிலை அமைப்பதற்கு சுமார் 680 கிலோ எடை கொண்ட 9 அடி உயரத்தில் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலையானது மினி லாரியில் கொண்டு வரப்பட்டது. சாலையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட சிலைக்கு இளைஞர்கள் மற்றும் ஆலங்குளம் பொதுமக்கள் சார்பில் பட்டாசுகள் வெடித்து, மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்பு கிரேன் உதவியுடன் காமராஜர் சிலையானது தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நிறுவப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார், நெல்லை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராமசுப்பு, சிலை அமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜாண் ரவி, எம்.எஸ். காமராஜ், , பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் ஆர்.கண்ணன், ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன், நகர செயலாளர் வில்லியம் தாமஸ், வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஞான பிரகாஷ், வக்கீல்கள் நெல்சன், சாந்தகுமார், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, வக்கீல் ஜாண்சன், ச.ம.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் ஜெகன், சோனா மகேஷ்,பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிலையை முன்னாள் எம்.பி. எச். வசந்த குமாரின் குடும்பம் சார்பில் அவரது மகன் விஜய் வசந்த் அன்பளிப்பாக வழங்கி உள்ளார்.