தென்காசி தொகுதி தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை
1 min read
Tenkasi constituency postal votes recount
12.7.2023
தென்காசி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2031 ம் ஆண்டு தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் நீதிமன்ற உத்தரவுபடி நாளை
(13.07.2023) மறு எண்ணிக்கை தென்காசி கோட்டாட்சியர் அலுவலக த்தில் வைத்து நடைபெற உள்ளது.
தென்காசி தேர்தல்
2021 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக எஸ் பழனி நாடார், அதிமுக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ் பழனி நாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு அடுத்தபடியாக அதிமுக சார்பில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த அதிமுக வேட்பாளர் எஸ். செல்வ மோகன்தாஸ் பாண்டியன் வாக்கு எண்ணிக்கையின் போது தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாகவும் எனவே மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்
தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை
(13.07 2023) மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தென்காசி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அலுவலர் கோட்டாட்சியர் என்பதால் தென்காசி கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து இந்த வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த வாக்கு எண்ணிக்கையின் போது அதிகாரிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் தவிர வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் ஒருவர் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர். மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.