சந்திராயன்-3 வெற்றிகரமாக செல்கிறது- விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பு
1 min read
Chandrayaan-3 Goes Successfully- Scientists Intensive Monitoring
15.7.2023
நிலவின் சுற்றுப்பாதையை நோக்கி சந்திராயன்-3 வெற்றிகரமாக செல்கிறது அதை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
சந்திராயன்-3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில் கடந்த 2008-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-1 விண்கலம் திட்டம் வெற்றி பெற்றது. 2019-ம் ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வெற்றி பெறவில்லை. லேண்டர் நிலவில் வேகமாக தரையிறங்கியதால் தொடர்புகளை இழந்தது.
இதற்கிடையே நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ததற்காக சந்திரயான்-3 விண்கலம், நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண் கலம் நேற்று மதியம் 2.35 மணிக்கு ஏவப்பட்டது. தீப்பிழம்பை கக்கியபடி சென்ற ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது. பூமியின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலத்தை இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு நிலையம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது.
சந்திரயான்-3 விண்கலம், நிலவின் சுற்று வட்டப் பாதையை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. அதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
பூமியின் சுற்று வட்ட பாதையை சுற்றி வரும் சந்திரயான்-3 விண்கலம் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடையும். புவியின் ஈர்ப்பு விசையும், நிலவின் ஈர்ப்பு விசையும் சமமாக இருக்கும் பகுதியில் புவி வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் வட்ட பாதையில் சந்திரயான்-3 விண்கலம் புதிய பயணத்தை தொடங்கும். அப்போது நிலவின் ஈர்ப்பு விசையின் துணையுடன் அந்த சுற்று வட்டப் பாதையில் விண்கலம் பயணிக்கும்.
அதன்பின் நிலவின் சுற்றுப் பாதையை சுற்றி வந்து ஆகஸ்டு 23-ந்தேதி நிலவில் விண்கலம் தரையிறங்கும். இஸ்ரோ விஞ்ஞானிகள் வரும் நாட்களில் நிலவுக்கு செல்லும் பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தை கொண்டு வர சுற்றுப்பாதையை உயர்த்தும் பணிகளை மேற்கொள்வார்கள். நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டதும், ஆகஸ்டு மாத இறுதிக்குள் தரையிறங்கும் வரிசை பணி தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.