போலி நியமன ஆணை தயாரித்து கொடுத்து அரசு பணியில் சேர முயன்ற இளம்பெண் அதிரடி கைது
1 min read
A young woman who tried to join the government service by preparing a fake appointment order was arrested
17/7/2023
போலி நியமன ஆணை தயாரித்து கொடுத்து அரசு பணியில் சேர முயன்ற இளம்பெண் அதிரடி கைது செய்யப்பட்டார்.
போலி ஆணை
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் எழுகோனை பகுதியை சேர்ந்தவர் ராக்கி(வயது25). இவர் அரசு வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். பலமுறை தேர்வு எழுதியும் அதில் அவர் தேர்வாகவில்லை என்று தெரிகிறது.‘
இதனால் போலி ஆவணம் தயாரித்து வேலைக்கு சேரலாம் என்று அவர் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் தேர்வு செய்யப்பட்டதாக போலி ஆவணங்கள் உருவாக்கி, போலி நியமன ஆணையை தயாரித்துள்ளார். பின்பு அதனுடன் கருநாகப்பள்ளி தாலுகா அலுவலகத்திற்கு சென்று, கீழ்ப்பிரிவு எழுத்தராக பணி நியமனம் செய்யப்பட்டி ருப்பதாக கூறி நியமன கடிதம் ஒன்றை தாலுகா அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்தார்.
ராக்கி கொடுத்த ஆவணங்களை தாலுகா அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் அவர்களுக்கு, ராக்கி கொடுத்த ஆவணங்கள் மற்றும் பணி நியமன ஆணை போலி என்பதை கண்டுபிடித்தனர். ஆகவே ஆவணங்களை ஏற்காமல் ராக்கியை அனுப்பி வைத்தனர். மேலும் அதுபற்றி கொல்லம் மாவட்ட கலெக்டரிடம் கருநாகப்பள்ளி தாசில்தார் புகார் செய்தார்.
இதனைத்தொடர்ந்து ராக்கி பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ராக்கியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அரசு வேலையில் சேரவேண்டும் என்பதற்காக போலி நியமன ஆணை தயாரித்ததை ஒப்புக்கொண்டார்.
கைது
இதனைத்தொடர்ந்து ராக்கியை போலீசார் கைது செய்தனர். ராக்கி போலீ ஆவணங்கள் தயாரித்து அரசு வேலையில் சேர முயற்சி செய்த சம்பவம் பற்றி அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. அவர்களுக்கு கூட தெரியாமல் தனது திட்டத்தை ராக்கி ரகசியமாக செய்து வந்திருக்கிறார்.