June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

புளியங்குடியில் பிளஸ்-1 மாணவி தற்கொலை- ஆசிரியை சஸ்பென்ட்

1 min read

Plus-1 student commits suicide in Puliangudi- teacher suspended

20.7.2023
தென்காசி மாவட்டம் புளியங்குடி, டிஎன் புதுக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மாணவி எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த ஆசிரியை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி பிச்சாண்டி மேலத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி இவரது மனைவி மாரியம்மாள் இவர்களது மகள் முனீஸ்வரி என்ற முகிலா (வயது16) இவர் புளியங்குடியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பசாமி இறந்துவிட்டார் இதனால் மாரியம்மாள் கூலி வேலைக்குச் சென்று தனது மகளை படிக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற முனிஸ்வரி மாலையில் வீட்டிற்கு வந்தார்.அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று திரும்பிய மாரியம்மாள் தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் சஞ்சய் காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனீஸ்வரியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம்

அதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட புளியங்குடி போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தபோது முனீஸ்வரி இறப்பதற்கு முன் எழுதி வைத்த ஒரு கடிதம் கிடைத்தது.

அந்த கடிதத்தில் முனீஸ்வரி எழுதி இருப்பதாவது:-

கடந்த 17 ம் தேதி பள்ளிக்கு சென்ற நான் இடைவேளையின் போது ஸ்காலர்ஷிப் தொடர்பாக சான்றிதழ் பெறுவதற்காக பள்ளி அலுவலகத்திற்கு சென்றேன். அப்போது சான்றிதழ் பெறுவதற்கு சற்று தாமதமான நிலையில் வகுப்பறைக்கு வந்த என்னை விலங்கியல் பிரிவு ஆசிரியை ( உதவி தலைமை ஆசிரியை) என்னை அனைத்து மாணவர்கள் முன்பு திட்டியதோடு வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தார். மேலும் தலைமை ஆசிரியை வந்தவுடன் உனது சான்றிதழை கொடுத்து வெளியே அனுப்பி விடுவேன் என்றும் கூறினார்.

இதனால் மனம் உடைந்த நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது

அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த புளியங்குடி போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் பிளஸ்-1 மாணவி முனீஸ்வரி தற்கொலையை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை இந்த மாதம் ஓய்வு பெறும் நிலையில் நேற்று அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் நேற்று அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் புளியங்குடி பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் முனீஸ்வரியின் தாயார் மாரியம்மாளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

மேலும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான வழக்கறிஞர் ஈ. ராஜா ஆறுதல் கூறியதோடு தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ரூபாய் 50 ஆயிரம் வழங்கினார்.மேலும் இதில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவி முனீஸ்வரியின் உடலை பெற்றுக் கொண்ட அவரது தாய் மாரியம்மாள் மற்றும் உறவினர்கள் புளியங்குடி மின்மயானத்தில் தகனம் செய்தனர்.

ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புளியங்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.