பாவூர்சத்திரம் ரயில் நிலையம் 120 வது பிறந்த நாள் விழா- தென்காசி எம்எல்ஏ பங்கேற்பு
1 min read
Bhavoorchatram Railway Station 120th Birthday Celebration – Thenkasi MLA Participation
3.8.2023
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தின் 120 ம் பிறந்தநாள் விழா பொதுமக்கள் சார்பில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பாவூர்சத்திரம் ரயில் நிலையம் 01.08.1903 அன்று தொடங்கப்பட்டு, 31.12.2008ல்
அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக மூடப்பட்டு பின்னர் 21.09.2012 அன்று மீட்டர் கேஜில் இருந்து அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியது.
தென்காசி – நெல்லை ரயில் வழித்தடத்தில் பாவூர்சத்திரம் உள்ளிட்ட 16 ரயில் நிலையங்கள் தற்போது அகல பாதையாக மாற்றப்பட்ட பின் செயல்பாட்டில் உள்ளது.
தற்போது ரயில்வே மின்மயமாக்கல் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால் விரைவில் மின்சார என்ஜின் மூலம் ரயில்கள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பாவூர்சத்திரம் வழியாக செங்கோட்டை – தாம்பரம் வாரம் மும்முறை ரயில், நெல்லை – பாலக்காடு பாலருவி தினசரி விரைவு ரயில், நெல்லை – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில், மேலும் நெல்லை – செங்கோட்டை இடையே நான்கு ஜோடி ரயில்கள் இயக்கப்பட்டு ரயில் வருகின்றன.
பாவூர்சத்திரம் ரயில் நிலையம் தொடங்கி 120 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து 120 வது பிறந்த நாள் விழா கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப் பட்டது. அப்போது பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ரயில் ஓட்டுனர்கள், ரயில் நிலைய அதிகாரிகள் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், தென்காசி எம்எல்ஏ எஸ்.பழனி நாடார், கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார், தொழிலதிபர் சேவியர் ராஜன், தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.