நெல்லை அருகே விபத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தி ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு
1 min read
A private TV news cameraman was killed in a road accident near Nellai
24.8.2023
புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் நெல்லை பகுதியின் செய்தி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33), சாலை விபத்தில் உயிரிழந்தார்.
ஒளிப்பதிவாளர்
சந்திரயான்-3 தொடர்பான செய்தி சேகரிப்பு பணிக்காக நேற்று காலை நெல்லையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு காரில் சென்றுள்ளனர் புதிய தலைமுறை செய்தி குழுவினர். பணியை முடித்துக் கொண்டு இரவு நெல்லை திரும்பும் போது நாங்குநேரி டோல்கேட் அருகில் அவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் செய்தி ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்தார்.
அவருடன் காரில் பயணித்த செய்தியாளர் நாகராஜன் உட்பட மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
உயிரிழந்த சங்கருக்கு மனைவியும், ஏழு வயதில் மகனும் உள்ளனர்.
மு.க.ஸ்டாலின் இரங்கல்
சங்கர் இறந்ததற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே புதன்கிழமை (ஆக.23) இரவு நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33) என்பவர், சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
இளம் வயதில் உயிரிழந்த தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் சங்கரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.
==
உயர் நீதிமன்ற கேள்விகளுக்கு துறை செயலாளர்கள், தலைவர்கள்தான் பதிலளிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்
சென்னை: உயர் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், தலைவர்கள் தான் பதிலளிக்க வேண்டும் என அனைத்து துறைக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வருவாய் துறையில் துணை ஆட்சியராக பணியாற்றிய ஜெயராம் என்பவர், மாவட்ட வருவாய் அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெற்ற போதும், அரசின் காலதாமதத்தால் பணி ஓய்வுக்கு முன் தனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி, பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்ததால் பதவி உயர்வு வழங்கும்படி உரிமை கோர முடியாது என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஜெயராமன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அமர்வு, 41 துணை ஆட்சியர்களின் பெயர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி பதவி உயர்வு பட்டியலில் இருந்த நிலையில் 10 பேருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், தமிழக பொதுத்துறை பிரிவு அதிகாரி அளித்த விளக்கம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், கடும் அதிருப்தி தெரிவித்தனர். பொதுத்துறை பிரிவு அதிகாரி அளித்த விளக்கத்தில் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கவில்லை. துறையின் செயலாளர் விளக்கம் அளித்திருந்தால் நீதிமன்ற கேள்விக்கு பதிலளித்திருப்பார்.
உயர் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், துறை தலைவர்கள் மட்டுமே பதிலளிக்க வேண்டும் என அனைத்து துறை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், அன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு விளக்கமாக பதிலளிக்க வேண்டும் என பொதுத்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.