கடையநல்லூர் பகுதியில் வெறிநாய்கடிக்கு 30 பேர் பாதிப்பு- எம்எல்ஏ புகார்
1 min read
30 people have been bitten by rabid dogs in Kadayanallur – MLA’s complaint
25.8.2023
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை இரவிச்சந்திரனை, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ. கிருஷ்ண முரளி நேரில் சந்தித்து வெறி நாய் கடி மற்றும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுவது சம்பந்தமாக
புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய் கடித்து சிறுவன் உள்பட பலர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் என்னிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், புளியங்குடி பகுதிகளில் இதேபோன்று 30-க்கும் மேற்பட்ட நபர்கள் தெரு நாய்களால் கடிபட்டு பாதிப்படைந்ததால் இந்த சம்பவம் பொது மக்களுடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி மாவட்டம் முழுவதும் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் ஏற்பட்ட வறட்சி காரணமாக கடையநல்லூர் தொகுதி முழுவதுமே பொது மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்க இயலாத சூழ்நிலை இருக்கிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி தர தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது அ.தி.மு.க. வடக்கு மாவட்ட துணை செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், குற்றாலம் பேரூர் அ.தி.மு.க. செயலாளரும் பேரூராட்சி மன்றத் தலைவருமான எம்.கணேஷ் தாமோதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
-முத்துசாமி, நிருபர்.