நிலவில் ஆக்சிஜன், கந்தகம் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டு பிடித்தது
1 min read
Pragyan rover discovered oxygen and sulfur on the moon
29.8.2023
நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் மற்றும் கந்தகம் உள்பட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திராயன்-3
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்த இஸ்ரோவின் சந்திரயான் – 3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி ஏவப்பட்டது. சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் கந்தகம் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவி, நிலவின் தென் துருவத்தில் சல்பர் தனிமம் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதேபோல், அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டினியம், மக்னிசீயம், சிலிகான் ஆகிய தனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதும் உறுதியாகியுள்ளது. ஹைட்ரஜன் உள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.