இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்ற மத்திய அரசுதிட்டம்
1 min read
Central government plan to change the name of India to Bharat
5.9.2023
வரும் பாராளுமன்றக் கூட்டத்தில் நம் நாட்டின் இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஜனாதிபதி அழைப்பிதழ்
டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கான விருந்து அழைப்பிதழ் குடியரசு தலைவரின் ராஷ்ட்ரபதி பவனில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இந்தியாவின் குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரதத்தின் குடியரசு தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக பல அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவும் பாரத் என பெயர் மாற்றம் செய்ய முஸ்தீபுகளில் உள்ள நிலையில் எதிர்கட்சிகள் இந்த பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்திருக்கின்றன.
சமீபத்தில் எதிர் கட்சிகள் கூட்டணிக்கு “இந்தியா” கூட்டணி என பெயர் வைக்கப்பட்டதிலிருந்து ‘இந்தியா’ என்ற பெயர் குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில்தான் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கான விருந்து அழைப்பிதழ் குடியரசு தலைவரின் ராஷ்ட்ரபதி பவனில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா என்ற நமது நாட்டின் பெயரை பாரதம் என மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜவை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் களம் இறங்கி உள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் முதல் கூட்டம் நடந்தது. அதை தொடர்ந்து பெங்களூருவில் 2வது கூட்டம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டது. இதன் பிறகு நாட்டின் பெயரை பாரத் என மாற்ற பாஜக தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதன்படி தனது டுவிட்டர் முகப்பு பக்கத்தில் இந்தியா என இருந்ததை பாரத் என மாற்றியுள்ளார் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா. பாரத் என அழைப்பதில் பெருமை கொள்வதாக அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியா என சொல்வதை விட பாரதம் என்று அழைப்பதே சரியானது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அண்மையில் பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்ட ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் இந்தியா என்ற சொல்லை தவிர்த்து பாரதம் என குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், வலிமையான, திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய ஆசிரியர்களுக்கு நன்றி என ஆளுநர் கூறியுள்ளார்.
இந்த நிலையில்தான் ஜி20 மாநாட்டிற்கான இரவு விருந்து அழைப்பிதழில் பாரத ஜனாதிபதி என்று ராஷ்ட்ரபதி பவன் குறிப்பிட்டுள்ளது.
காங். கண்டனம்
இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ராஷ்ட்ரபதி பவன் அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்றே குறிப்பிடப்படும் என்றும் அரசியல் சட்டம் கூறும் மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற கருத்து ஒன்றிய அரசால் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி பல்வேறு தலைவர்களின் கருத்துக்கள் பின்வருமாறு:-‘
பாஜக எம்பி ஹர்னாத், “ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட இந்தியா என்ற பெயரை அழைப்பதில் அவமானமாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கூறும்போது, “நாட்டுக்கு பெருமை அளிக்கும் அனைத்திற்கும் காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.” என்றர்
மதுரை எம்பி சு. வெங்கடேசன் கூறும்போது, “இந்தியா என்ற பாரதம் என்று அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது.” என்றார்
“மக்கள் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் நாம் ‘இந்தியா’ என நம் நாட்டை அழைக்க கூடாது. அதற்கு பதிலாக ‘பாரத்’ என அழைக்க தொடங்க வேண்டும்,” என ராஷ்ட்ரீய சேவா சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதே விவகாரத்தை பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் நரேஷ் பன்ஸால், ஏற்கனவே மாநிலங்களவையில் எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் “வெள்ளையர்களின் ஆதிக்க ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட அடிமை மனப்பான்மை, சுதந்திரம் பெற்றும் நமக்கு நீங்கவில்லை. அதனை நீக்கும் முயற்சியாக பல முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த ‘அம்ருத் கால்’ காலகட்டத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் அடுத்த 1000 ஆண்டுகளுக்கான பயணிக்கும் திசையை நாட்டுக்கு காட்டுவதாக இருக்கும்” குறிப்பிட்டு இருந்தார்.
இதன் காரணமாக இந்த பாராளுமன்றக் கூட்டத்தில் இந்தியா என்ற பெயர் பாரதம் என்று மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.