சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி
1 min read
Husband and wife killed by electric shock near Sivagiri
6.9.2023
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி கணவனா மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர். தென்காசி மாவட்டம், சிவகிரியை அடுத்த குலசேகரப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏமு கோனார் என்பவரது மகன் முருகன் (வயது 55). இவருடைய மனைவி வேலம்மாள் (45). விவசாயிகளான இருவரும் புளியங்குடி அருகே புன்னையாபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தனர்.
இவர்கள் கடந்த 2 வருடமாக சிந்தாமணி ஊரைச் சேர்ந்த பாக்கிய நாடார் மகன் அன்னமணி என்பவரது வயல்காட்டை கட்டுக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்த வயல் வாசுதேவநல்லூர் அருகே ராமர் கோவில் மேற்கே ராசிலப்பேரி குளத்து புரவில் உள்ளது. நேற்று முருகனும் அவரது மனைவியும் வயல் வேலைக்கு சென்றனர். வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கத்தரிக்கு முருகன் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது காட்டுப் பன்றிக்கு போட்ட மின்வேலியில் மிதித்து விட்டார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. முருகனை காப்பாற்ற அவரது மனைவி சென்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது. சிறிது நேரத்தில் முருகனும் அவர் மனைவியும் பரிதாபமாக இறந்தனர்.இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்த சம்பவம அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.