தென்காசியில் சர்வதேச தூய காற்று தின விழிப்புணர்வு வாகனம்-கலெக்டர் தொடங்கி வைத்தார்
1 min read
International Clean Air Day awareness vehicle-collector launched in Tenkasi
8.9.2023 தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் 2023-ஐ முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தினை கலெக்டர் ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- காற்று மாசுபாடு பூமியின் சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் காலநிலை ஆகியவற்றை மோசமாக பாதிக்கிறது. மாசற்ற காற்று, மனிதர்களுக்கு மட்டுமல்ல பூமியின் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத தேவையாகும். ஆகவே 2019-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அதன் நிலையான வளர்ச்சி குறித்த தனது 74-வது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ந் தேதி நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதன் நோக்கமானது 2030-ம் ஆண்டுக்குள் காற்று, நீர் மற்றும் மண்ணில் உள்ள வேதிப்பொருட்கள் போன்ற மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் நோய்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து அதன் மூலம் அனைவருக்கும் சுத்தமான காற்று என்ற தீர்மானத்தை ஐ.நா. ஏற்றுக்கொண்டது. எனவே காற்றின் தரம் மற்றும் கழிவு மேலாண்மை மூலம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை குறைக்க நாமும் நமது பங்களிப்பினை வழங்க வேண்டியது அவசியமாகும். இந்த ஆண்டுக்கான செப்டம்பர் 7-ந் தேதி கொண்டாடப்படும் நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினத்தின் கருப்பொருளான “தூய காற்றிற்காக ஒன்றி னைவோம்” என்பதை நாம் அனைவரும் நடைமுறைப் படுத்தி நீலவானின் தூய காற்றினை பெற்றிடுவோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் உதவி சுற்றுசூழல் பொறியாளர் சுகுமார், உதவி பொறியாளர் சுற்றுசூழல் ஜெபா , உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.