கடையநல்லூர்-அடவிநயினார் அருவியில் குளித்த டிரைவர் சாவு
1 min read
Driver dies after bathing in Kadayanallur-Adavinayanar waterfall
21.9.2023
கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான மேக்கரை அருகே உள்ள அடவிநயினார் அணை 132 அடி கொள்ளளவு கொண்ட அணையாகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் கடந்த சில மாதங்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் அணையில் குறைந்த அளவே தண்ணீர் காணப்பட்டது. தற்போது மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் சில தினங்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தற்போது அணை நீர்மட்டம் 94 அடியை கடந்துள்ளது. நேற்று மாலை அச்சன்புதூர் நடுத்தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செய்யது மசூது(வயது 32) மற்றும் அவரது நண்பர்கள் அணைக்கு வரும் நீர் வீழ்ச்சியில் குளிக்கச்சென்றனர். அப்போது பாறை இடுக்கில் செய்யது மசூது சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த அச்சன்புதூர் போலீசார் மற்றும் செங்கோட்டை தீயணைப்பு துறை அதிகாரிகள் இரவு சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரமாக போராடி உயிரிழந்த டிரைவரை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.