விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை-இஸ்ரோ தகவல்
1 min read
No information received from Vikram Lander- ISRO information
22.9.2023
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, ஆகஸ்டு 23-ந்தேதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
இதன் பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. இதனை லேண்டர் ஒரு குழந்தையைப் போல் கண்காணித்து வந்தது. ரோவர் வெளியான அந்த நாள், நிலவில் 14 நாட்களுக்கு (ஒரு நிலவு நாள்) பிறகு இரவு முடிந்து, பகல் ஆரம்பித்த நாள். அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியை தொடங்கியது.
ரோவரில் உள்ள ‘லிப்ஸ்’ எனப்படும் ‘ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி’, நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது. தொடர்ந்து, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேல்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.
உறக்க நிலை
தொடர்ந்து நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை.
இதனால் இம்மாத தொடக்கத்தில் நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நிலவின் தென் துருவத்தில் சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும்போது, அங்கு உறக்கத்தில் உள்ள ரோவர், லேண்டர் கருவிகளின் செயல்பாட்டு நிலைமைகள் மேம்படும். 14 நாட்கள் நீடித்த நிலவு இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கிறது.
இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர்.
சூரிய உதயம் ஆரம்பிக்கும்போது, உறக்க நிலையில் இருக்கும் லேண்டரும், ரோவரும் எழுந்து மீண்டும் ஆராய்ச்சி பணியில் ஈடுபடும். சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி செயல்பாட்டிற்கு வரும். இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது கூடுதலான அறிவியல் தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
வழக்கப்படி இன்று சூரிய உதயம் ஆனது. ஆனால் நிலவில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிடம் இருந்து இதுவரை சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ளும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 14 நாள் உறக்கத்துக்கு பிறகு இன்று விழித்தெழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தவித சிக்னலும் கிடைக்கவில்லை. நிலவில் இன்று முதல் மீண்டும் சூரிய ஒளிபட்டபோதிலும், விக்ரம் லேண்டர் செயல்பட தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.