வந்தே பாரத் ரெயிலை இயக்க 248 லோகோ பைலட்டுகளுக்கு சிறப்பு பயிற்சி
1 min read
Special training for 248 loco pilots to operate Vande Bharat Rail
22.8.2023
வந்தே பாரத் ரெயிலை இயக்க 248 லோகோ பைலட்டுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
வந்தே பாரத்
தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்குள் 75 வந்தே பாரத் ரெயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் மேலும் 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அதில் நெல்லை-சென்னை வழித்தடமும் அடங்கும்.
சிறப்பு பயிற்சி
உயர் தொழில்நுட்ப திறன் கொண்ட இந்த வந்தே பாரத் ரெயில்களை இயக்க பயிற்சி பெற்ற லோகோ பைலட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த வந்தே பாரத் ரெயில்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் இயக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியாற்ற லோகோ பைலட்டுகள், உதவி லோகோ பைலட்டுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மொத்தமாக வந்தே பாரத் ரெயிலுக்காக 248 லோகோ மற்றும் உதவி லோகோ பைலட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை, காசியாபாத்தில் உள்ள மின்சார கருவிகள் பயிற்சி மையம், ஆவடியில் உள்ள மண்டல மின்சார இழுவை பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரெயிலில் உள்ள ஓட்டுநர் அறையானது, ரெயிலை எளிதாக இயக்க வசதியாக பெரிய திரை, பணி சூழலுக்கு ஏற்ற இருக்கை வசதி, அதிக இட வசதி, ரெயில்வே பாதுகாவலரிடம் பேசும் வசதி, ரெயில் முன் மற்றும் பின் பக்கங்களில் காமிரா மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட நவீன வசதிகள் இதில் உள்ளது.