இன்னும் மன்னிப்பு கேட்காதால் உதயநிதி தலைக்கு ரூ.25 கோடி என உயர்த்தி சாமியார் ஆணவம்
1 min read
If he still does not apologize, the preacher is arrogant to increase the amount to Rs. 25 crores per head
23.9.2023
அமைச்சர் உதய நிதி இன்னும் மன்னிப்பு கேட்காதால் அவரது தலைக்கு ரூ.25 கோடி என உயர்த்தி சாமியார் ஆணவத்தை வெளிக்காட்டியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
சனாதனத்தை விமர்சித்ததற்கு உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என அயோத்தி துறவியும் அயோத்தி தபஸ்வீமடத்தின் தலைவருமான ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா அறிவித்தார். இந்த நிலையில் அவர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
மற்ற மதங்களை உதயநிதி விமர்சித்திருந்தால் அவர் இன்று என்னவாகி இருப்பாரோ தெரியவில்லை. பா.ஜ.க.வின் தலைவர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் ஹதீஸ் மறையில் இருப்பதைத்தான் எடுத்துரைத்தார். ஆனால் அவருக்கு கிளம்பிய எதிர்ப்பால் நுபுரை கட்சியில் இருந்து நீக்கி பா.ஜ.க.நடவடிக்கை எடுத்தது. ஆனால், உதயநிதி மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
மன்னிப்பு
தமிழக அமைச்சர் உதயநிதி தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விடுவார் என எதிர்பார்த்தேன். இதை அவர் செய்யாததால்தான் நான் அவரது கழுத்தை வெட்டி வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு என அறிவித்தேன். இதற்கு பின்பும் அவர் தனது தலையை சீவ ரூ.10 கோடி தேவையல்ல, 10 ரூபாய் சீப்பு போதுமானது எனக் கிண்டலடித்தார். இதனால் 2 தினங்களுக்கு முன் ஆயிரக்கணக்கான ஆச்சாரியார்கள் கொண்ட தர்மசபையை கூட்டி ஆலோசனை செய்தேன். இதன்படி அவர் தனது வார்த்தைகளை வாபஸ் பெற்றால் நாமும் நம் எச்சரிக்கையை வாபஸ் பெறுவோம். இல்லையெனில் எங்கு ஒளிந்திருந்தாலும் அவர் எங்களிடமிருந்து தப்ப முடியாது.
அவர் தலையை கொய்ய நான் அறிவித்த ரூ.10 கோடியை தற்போது ரூ.25 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளேன்.
அவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு திருந்த நாம் விரும்புகிறோம். சனாதனத்தின் மீது நம்பிக்கை இல்லை எனில் உதயநிதி வேறு மதத்திற்கு மாறிக் கொள்ளலாம். இதை விடுத்து அவர் சனாதனத்தை ஒழிப்பேன் எனக் கூறுவது அசம்பாவிதம் ஆகும், இது உலகம் முழுவதிலும் அமைதியை குலைக்கும் செயலாகும். இவருக்கு பின் ஆ.ராசாவும் இதேபோன்று விமர்சித்தது தவறு.
பாரதத்தில் சனாதனத்தை மதித்து அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் சுமார் 120 கோடி பேர் உள்ளனர். 5,000 ஆண்டுகளுக்கு முன் சனாதனம் மட்டுமே இருந்தது. வேறு எந்த மதங்களும் இல்லை. இதன் குறிப்பு பழம்பெருமை வாய்ந்த ஆன்மிக நூலான ரிக்வேதத்திலும் உள்ளது. சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர் அதை மதிக்கும் நாட்டின் 80 சதவீத மக்களை அழிக்க முயல்வதாகவே அர்த்தம். இவ்வாறு அவர் கூறினார்.