June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: சாலைப்பணிகளை பார்வையிட்டார்

1 min read

In Coimbatore, Chief Minister M. K. Stalin’s review: visited the road works

24.9.2023
கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவர் சாலைப்பணிகளை பார்வையிட்டார்.

மு.க.ஸ்டாலின்

2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது. முதல் கட்டமாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி திருச்சியில் நடைபெற்றது. 2-வது கட்ட பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
இந்தநிலையில் 3-வது கட்டமாக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூர் தொட்டியப்பாளையத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றுகிறார்.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு, கோவை மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க சார்பில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து மேள, தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில் ஓட்டலுக்கு செல்வார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டலுக்கு செல்லாமல் கோவை மாநகராட்சி 5 மற்றும் 8-வது வார்டு பகுதிகளில் நடந்து வரும் சாலை பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காளப்பட்டி பகுதியில் உள்ள துளசி கார்டன் பகுதிக்கு சென்றார். அங்கு நடந்து வரும் சாலை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலையில் 2 அடி தோண்டி பார்த்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு நடக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அங்கு ஆய்வை முடித்து விட்டு, நேராக விளாங்குறிச்சி நஞ்சப்பா சாலையில் நடந்து வரும் சாலை பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் கரட்டுமேடு வி.கே.நகர் பகுதிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடந்து வரும் சாலை பணியையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கிராந்திகுமார், அரசு அதிகாரிகள் இருந்தனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
பின்னர் மாலையில் அவர் கார் மூலமாக திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூரில் நடக்கும் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றார்.
திருப்பூர் செல்லும் வழியிலும் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
முதலமைச்சர் வருகையையொட்டி கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. விமான நிலையம், அவர் தங்கும் நட்சத்திர ஓட்டல் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக நேற்று இரவில் கோவை மாநகர் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனை நடத்தப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.