உலக சுற்றுலாத்தினத்தை முன்னிட்டு தோரணமலையில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்
1 min read
Various competitions for students in Thoranamalai in view of world tourism
23.9.2023-
உலக சுற்றுலாத்தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் தோரணமலை நிர்வாகமும் இணைந்து மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
தோரணமலை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அகத்தியர், தேரையர் தங்கி வழிபாடு நடத்திய தலம். அகத்தியர் இங்குதான் முதன்முதலி?ல் பல்கலைக்கழகம்போல் பாடசாலை அமைத்தார். முதன்முதலாக கபால அறுவை சிகிச்சை நடந்த இடமும் இதுதான்.
இக்கோவிலில் தைப்பூசம் விழா வெகு விமரிசசையாக நடைபெறும். மேலும் வைகாசி விசாகம், தமிழ்புத்தாண்டு, தமிழ்மாத கடைசி வெள்ளி வழிபாடு, பவுர்ணமி கிரிவலம், கிருத்திகை பூஜை போன்றவையும் சிறப்பாக நடைபெறும். இங்கு தினமும் மதியம் அன்னதானம் நடைந்து வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை, கடைசிவெள்ளி, பவுர்ணமி நாளில் காலையில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
இக்கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் ஆன்மிகப்பணியோடு அறப்பணியையும் செய்து வருகிறார்.
கடைசி வெள்ளி அன்று விவசாயம் செழிக்க வருண கலச பூஜை நடத்தப்படுகிறது. தமிழ்புத்தாண்டு அன்று சிறந்த சமூக சேவர்களுக்கு தோரணமலையான் விருது வழங்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் கடையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கோவில் சார்பில் தினமும் மதியம் உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. மேலும் பொதுநல ஊழியர்களுக்கு முக்கசவசம், கிருமி நாசியும் இலவசமாக வழங்கப்பட்டது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் இறைஅருளோடு பொது அறிவையும் பெற்றுச் செல்லும் வகையில் நூல்நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு ஆன்மிக புத்தகங்கள் மட்டுமின்றி, பொதுஅறிவு நூல்களும், போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் உள்ளன. மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு பயிற்சியும் அவ்வப்போது அளிக்கப்படுகிறது. மேலும் காவல்துறை, ராணுவம் போன்ற பணிகளுக்கு செல்ல விரும்புவோருக்காக உடற்பயிற்சி மைதானமும் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ளன.
அவ்வப்போது பக்கத்து ஊர்களில் இருக்கும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை அழைத்து பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது. கடந்த கோடை விடுமுறையின்போது ஞாயிற்றுக்கிழைமைகளில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி, விளையாட்டுப்போட்டி, கிராமிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தோரணமலை பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன் குடும்பத்தார் சார்பில் முத்துமாலைபுரத்தில் உள்ள அவர்களின் குடும்ப வீடு படிக்க மாலைநேர வகுப்பு நடத்த ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அங்கு நூல் நிலையமும் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு இரவு பாடசாலை நடந்து வருகிறது. அதேபோல் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஊர் இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் உலக சுற்றுலாத்தினத்தையொட்டி இன்று 24-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலாத்துறையும் தோரணமலை நிர்வாகமும் இணைந்து மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் தோரணமலை அடிவாரத்தில் நடத்தப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ-மாணவிக்கு கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான மாணவ&மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அனைவருக்கும் காலையில் பொங்கலும், மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது.