தென்காசி மாவட்டத்தில் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்த நிரந்தர தடை – ஆட்சியர் அதிரடி உத்தரவு
1 min read
Permanent ban on use of plastic products in Tenkasi district – Collector’s action order
26.9.2023
தென்காசி மாவட்டத்தில் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மஞ்சப்பை
தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தினை தென்காசி மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்திட ஏதுவாக மாவட்டம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிக்கு விதிக்கப்பட்ட தடையாணையை அமல்படுத்தி பசுமை மாவட்டமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நோக்கம் நிறைவேறும் வகையில் நெகிழிப் பைகள், நெகிழி கொடிகள், நெகிழி தாள்களில் வழங்கப்படும் உணவு பொட்டலங்கள், நெகிழி மேசை விரிப்பு, நெகிழி தட்டுகள், நெகிழி முலாம் பூசப்பட்ட தேநீர் குவளைகள், ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி குவளைகள், நெகிழி குடிநீர் பாட்டில்கள், குடிநீர் பாக்கெட்டுகள் மற்றும் நெகிழி உறிஞ்சி குழல்கள் போன்ற நெகிழி பொருட்கள் பயன்பாட்டிற்கு மாவட்டம் முழுவதும் நிரந்தர தடை விதிக்கப்படுகிறது.
மேலும் பொது மக்களும், வணிகர்களும் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் தங்கள் வீட்டு கழிவுகளை மக்கும்/மக்காத கழிவுகள் என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கடைவீதிகளில் பொருட்கள் வாங்கச் செல்லும்போது நெகிழி பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை எடுத்துச் செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாடு தொடர்பாக அரசு அலுவலர்களால் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். நேர்வில் நெகிழி பொருட்களின் பயன்பாடு கண்டறியப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.