நெடுஞ்சாலை பள்ளங்களுக்கு இனி பொறியாளர்களே பொறுப்பு: மத்திய அரசு அதிரடி
1 min read
Engineers responsible for potholes: new plan to upgrade highways
2.10.2023
பள்ளங்களுக்கு இனி பொறியாளர்களே பொறுப்பு: நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்த புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களினால் மட்டுமே 3625 சாலை விபத்துக்கள் நடைபெற்றதாகவும் அதில் சிக்கி இதுவரை 1481 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2021-ல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதனை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்தையும் குழிகள் மற்றும் பள்ளங்கள் அறவே இல்லாத சாலைகளாக மாற்றுவதற்கான வழிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென காலக்கெடுவையும் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. சாலைவழிகளை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான யணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பொறுப்பில் உள்ள ஒவ்வொரு திட்ட இயக்குனரும் ஆய்வுகளை அதிகம் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறையாவது தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலைகளின் அனைத்து பிரிவுகளையும் பார்வையிட வேண்டும், மேலும், அங்கு எழும் எந்தவொரு பராமரிப்பு சிக்கல்களையும் உடனடியாக தீர்க்க வேண்டும். இப்பணியை சரிவர செய்யாத பொறியாளர்கள் மீது நடவடிக்கைகள் பாயும் என தெரிகிறது.
நாடு முழுவதும் உள்ள மொத்தம் 1.46 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையை இந்த நடைமுறைக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
குழிகளைக் கண்டறிவது, பராமரிப்பு குறைபாடுகளை அடையாளம் காண்பது, வடிகால்கள் அமைப்பது உள்ளிட்ட இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்த பொறியியல் மாணவர்களை ஈடுபடுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.