தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
1 min read
Manimutharu falls flooded due to incessant rains
2.10.2023
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மழை
மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றும் அருவியில் நீர்வரத்து குறையாததையடுத்து 3-வது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு அம்பாசமுத்திரம் வனத்துறையினர் தடை விதித்தனர்.
இதையடுத்து பள்ளி விடுமுறை நாட்களாக இருந்ததால் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள் தடை விதிக்கப்பட்டு பார்ப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அருவியில் நீர்வரத்து சீராகும் வரை குளிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
பாலருவி
மேலும் தொடர் மழை காரணமாக செங்கோட்டை அருகே பாலருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அப்புறப்படுத்தினர். தண்ணீர் வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் பாலருவிக்கு குளிக்க சென்ற ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் மீண்டும் குற்றாலத்திற்கு புறப்பட்டனர்.