கடலூரில் 12ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை
1 min read
Class 12 student stabbed to death in Cuddalore
3.10.2023
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பிளஸ் 2 மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
.
இது குறித்து போலீஸ் தரப்பு வெளியிட்ட தகவல் வருமாறு:-
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா (17). இவர் விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை சுமார் 9 மணி அளவில் இவர் பள்ளிக்கு செல்வதற்காக ஸ்ரீமுஷ்ணம் – விருத்தாசலம் சாலையில் உள்ள மேல் புளியங்குடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். இவருடன் பல மாணவர்களும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தனர்.
அப்போது அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணிய மகன் ஆனந்த் (22) வந்தார். இவர் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு மின்சாரத் துறையில் தற்காலிகமாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஜீவாவிடம் சென்று தனியா பேச வேண்டும் என்று கூறி அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் பெலாந்துரை வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜீவாவை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனிடையே, அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஜீவாவின் விழுந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்து மருத்துவர்கள், ஜீவா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இதனைத் தொடர்ந்து ஜீவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேத்தியாத் தோப்பு டிஎஸ்பி ரூபன் குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாணை நடத்தினர்.
மேலும், காதல் பிரச்சினையில் முன் விரோதமா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.