அடுத்த 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்
1 min read
Northeast Monsoon will start in next 72 hours
19.10.2023
தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியது என்றும், அடுத்த 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் பெய்யும். அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் இடையில், சற்று தாமதமாக தொடங்கியது.
இந்த தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் அதிக மழை பொழிவை பெறும். இது தவிர மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் சராசரியான மழையை கொடுக்கும்.
தென்மேற்கு பருவ மழை காலத்தில் தென் மாநிலங்களில் குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் இந்த பருவ காலத்தில் அதிக மழையை பெற்று வருகின்றன.
இந்த நிலையில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியது என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 72 மணி நேரத்தில் தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல் இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மிதமான மழை
தமிழகத்தில் 24-ந் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக (20.10.2023 முதல் 24.10.2023 வரை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.