சந்தனப் பேழையில் அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளார் உடல் அடக்கம்
1 min read
Bangaru Adikalar was buried in a sandalwood casket with state honors
20.10.2023
மரணம் அடைந்த பங்காரு அடிகளாரின் உடல் சந்தன பேழையில் அமர்ந்த நிலையில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
பங்காரு அடிகளார்
லட்சக்கணக்கான பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்பட்டவர் வேல்மருவத்தூர் பங்காரு அடிகளார். மேல்மருவத்தூரில் இவர் தொடங்கிய ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஓம் சக்தி என்ற குரலை எங்கும் ஒலிக்கச் செய்தது. ஆதிபராசக்தி அம்மனின் ரூபமாக பங்காரு அடிகளாரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். அம்மாவை தரிசனம் செய்தால், அவரது அருள்வாக்கு கேட்டால் துன்பங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தங்களின் ஒரே நம்பிக்கையாக இருந்த பங்காரு அடிகளார் நேற்று காலமானார். அவர் இயற்கை எய்தியதை அறிந்ததும் அவரது முகத்தை இறுதியாக ஒருமுறை பார்த்து விடலாம் என்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வந்தனர். பங்காரு அடிகளார் உடல் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஆதிபராசக்தியின் பாதங்களில் ஜோதியாக கலந்து விட்ட பங்காரு அடிகளார் உடலானது இன்று மாலையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. சந்தன பேழையில் வைத்து தியான நிலையில் பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பங்காரு அடிகளார் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
இறுதிச்சடங்கு நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, எம்.பி.ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவரது உடலுக்கு 6 மூலிகைகள் மற்றும் பால், பன்னீர், சந்தனம், குங்குமம், மஞ்சள், இளநீர் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.
அடிகளார் அருள்வாக்கு சொல்லும் புற்று மண்டபம் கருவறை அருகே உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பளிங்கு சிலை வைக்கப்பட உள்ளது.
மனிதர்கள் மரணித்தால் உடல் அடக்க செய்யப்படும்போது படுக்கை வசத்தில்தான் அடக்கம் செய்வார்கள். ஆனால் சித்தர்களுக்கு செய்வதைப் போல தியான நிலையில் அமர வைத்து பங்காரு அடிகளாரின் உடன் அடக்கம் செய்யப்பட்டது.