தென்காசி அருகே சிப்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
1 min read
A fine of Rs 30,000 was imposed on a chip manufacturing company near Tenkasi
26.10.2023
தென்காசி வட்டார பகுதிக்குட்பட்ட இலஞ்சி. வள்ளியூர் பகுதியில் உள்ள சிப்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த வாரம் தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த சீலிட்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்த நேந்திரன் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் உணவு மாதிரிக்காக எடுத்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பினார்.
இந்நிலையில் சிப்சில் அதிகப்படியான செயற்கை வண்ணம் கலந்திருந்ததாலும், லேபிள் குறைபாடுகள் இருந்ததாலும் அங்கு தயாரிக்கப்பட்ட சிப்ஸ் தரம் குறைந்தது மற்றும் பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என்று அறிக்கை வந்தது. அதனடிப்படையில் சிப்ஸ் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர மாவட்ட நியமன அலுவலர் மூலமாக மாநில உணவுபாதுகாப்பு ஆணையருக்கு அனுமதி கோரப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநில உணவுபாதுகாப்பு ஆணையர் லால்வேனா சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு தொடர அனுமதி அளித்ததின்பேரில், தென்காசி வட்டார உணவுபாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன், செங்கோட்டை நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் சுனில்ராஜா, சிப்ஸ் நிறுவன உரிமையாளருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதமும்,கோர்ட்டு கலையும் வரையில் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் சுரேஷ் ஆஜரானார்.