கேரளாவில் 30-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
1 min read
Heavy rain likely in Kerala till 30th
27.10.2023
கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இடுக்கி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில் கேரளாவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சுழற்சியின் தாக்கத்தால் கேரளாவில் வருகிற 30-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
29 மற்றும் 30-ந்தேதிகளில் மாநிலத்தில் லேசான மற்றும் மிதமாக மழை பெய்யும் எனவும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே நேரத்தில் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அது மட்டுமின்றி கேரள கடற்கரை பகுதியில் அதிக அலை அடிக்கும் என்று இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் அலைகள் 1.8 மீட்டர் உயரம் வரை எழுந்து அடிக்கும் என்பதால், கடலோர கிராமங்களுக்குள் கடல்நீர் புகும் அபாயம் இருப்பதாகவும், ஆகவே கடற்கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கடல் அலைகள் ஆக்ரோஷமாக அடிக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.