தென்காசியில் கனமழை: ராமநதி, கருப்பாநதி அணையில் 3 அடி உயர்வு
1 min read
Heavy rains in Tenkasi: 3 feet rise in Ramnadi, Karuppanadi dams
6.11.2023
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மாநகர், புறநகர், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் என மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் முழு வீச்சில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு பிறகு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. மாநகரில் மதியம் சுமார் 2 மணி நேரம் வரை பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
அதேநேரம் விடுமுறை நாள் என்பதாலும், தீபாவளிக்கு ஒரு வாரமே இருப்பதாலும் பஜார்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மழையால் ஆங்காங்கே அவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
அணைகளை பொறுத்தவரை மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் 9 மில்லிமீட்டர் மழை பெய்தது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 21 மில்லிமீட்டர் மழை கொட்டியது. தொடர்மழையால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று அந்த அணை 60 அடியை எட்டியது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை 89 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 102 அடியாகவும் உள்ளது. மாவட்டத்தில் அம்பை, ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு, மூலக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்றும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
தென்காசியில் நேற்று மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பெய்த மழையால் காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் தெப்பக்குளம் நிரம்பியது. இரவு பெய்த கனமழையால் பிரதான சாலைகளில் உள்ள சாக்கடை வடிகால் நிரம்பி மழை நீருடன் கலந்து வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இன்றும் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
தென்காசி சுவாமி சன்னதி பஜார், அனைக்கரை தெரு, நடுபல்க், தெப்பக்குளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலைகள் நீரில் மூழ்கியது. கடந்த வருடங்களில் தென்காசியில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவிற்கு மழை பெய்தது இல்லை எனவும் தற்போது ஏற்பட்ட மழை வரலாறு காணாத மழை என்று மக்களால் கூறப்படுகிறது.
இவ்வாறான கனமழையின்போது சாக்கடை வடிகால் நீர் மழை நீரில் கலப்பதை தடுக்கும் வண்ணம் வடிகால் சுவர்களை உயர்த்தி அமைக்கப்பட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதிகபட்சமாக தென்காசியில் 12.4 சென்டிமீட்டரும், ஆய்க்குடியில் 10 சென்டிமீட்டரும் மழை பெய்தது. செங்கோட்டையில் 26 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்த வண்ணம் இருந்தது.
அணைகளை பொறுத்தவரை கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் என அனைத்து அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால், அவைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடனாவில் 21 மில்லிமீட்டர் மழை பெய்தது. தொடர்மழையால் கடனா அணை நீர்மட்டம் 2 அடியும், ராமநதி அணை நீர்மட்டம் 3 அடியும் உயர்ந்துள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 36 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், எட்டயபுரம், கீழ அரசடி, காடல்குடி ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்தது.