முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நலமுடன் உள்ளார்-மா.சுப்பிரமணியன் தகவல்
1 min read
Chief Minister M.K. Stalin is fine – M. Subramanian informs
7.11.2023
முதல்-அமைச்சராக பதவி ஏற்றது முதல் மு.க.ஸ்டாலின் ஓய்வின்றி பல இடங்களுக்கு சென்று பணியாற்றி வருகிறார். அதில் முக்கியமாக கள ஆய்வுப் பணியில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்
அதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும், அடுத்தடுத்து பல்வேறு அரசு விழாக்களுக்கும் சென்று மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பது, மக்களை சந்திப்பது, நீண்ட நேரம் உரையாற்றுவது என ஓய்வு எடுக்காமல் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 3ஆம் தேதி முதல், அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. குறிப்பாக, சென்னை பெசன்ட் நகரில், ‘நடப்போம் நலன் பெறுவோம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைக்க இருந்த நிலையில், அதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியான நிலையில், சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையாக குணமடைவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பருவகாலத்தில் வரும் வைரஸ் காய்ச்சலால் முதல்-அமைச்சர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ஓய்வில் இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.