தமிழகத்திற்கு டிசம்பர் இறுதி வரை தினமும் 2700 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை
1 min read
The Cauvery Management Committee has recommended releasing 2700 cubic feet of water per day to Tamil Nadu till the end of December
23/11/2023
தமிழகத்திற்கு டிசம்பர் இறுதி வரை தினமும் 2700 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு கூறியுள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழு
காவிரிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது.
ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரள மாநில அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் இருந்து பங்கேற்றனர்.
இதில் தமிழ்நாட்டில் இருந்து காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் ஆர். சுப்பிரமணியன், முதன்மை பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். அவர்கள் கூறியதாவது:-
இந்த மாதம் கர்நாடகத்தில் இருந்து பருவமழையால் காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கனஅடி வரை தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். ஆனால் தர வேண்டிய பழைய நிலுவை அப்படியே உள்ளது. இதுவரை தமிழகத்துக்கு 11 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். அது கிடைக்கவில்லை. இந்த டிசம்பர் மாதம் 6 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். அதையும் சேர்த்து மொத்தம் 17 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும். எனவே அந்த தண்ணீர் கிடைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.
பரிந்துரை
இதைத்தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 2700 கன அடி தண்ணீரை டிசம்பர் இறுதி வரை திறக்க வேண்டும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.