தோல்விக்கு தி.மு.க.வின் சனாதன எதிர்ப்பு காரணம்-காங். பிரமுகர்கள் குற்றச்சாட்டு
1 min read
DMK’s opposition to Sanatana is the reason for election defeat-Cong. Accusation of celebrities
3.12.2023
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சதீஸ்கரில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு தி.மு.க.வின் சனாதன எதிர்ப்புதான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களே குற்றம் சாட்டுகிறார்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் 2-ந் தேதி திராவிடக்கழகம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “சனாதன தர்மம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டும் அல்ல; டெங்கு, மலேரியா போன்று ஒழிக்கப்பட வேண்டியது” என பேசினார்.
சர்ச்சையை கிளப்பிய உதயநிதியின் பேச்சிற்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆதரிக்கும் விதமாக கருத்து தெரிவித்தனர்.
ஆனால் பா.ஜ.க.வினர் உதயநிதிக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர்.
அதேநேரம், தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், இது குறித்து திட்டவட்டமான கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இதை தொடர்ந்து, இந்து மத உணர்வினை புண்படுத்தியதாக உதயநிதி மீது அவமதிப்பு வழக்கு பல மாநிலங்களில் தொடரப்பட்டது. இது தொடர்பாக அவர் மீதான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின.
இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து, பா.ஜ.க., பெரும்பான்மை எண்ணிக்கைக்கும் அதிகமாக இடங்களை பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. ம.பி.யில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு முயன்ற காங்கிரஸ் சென்ற தேர்தலை காட்டிலும் மேலும் பல இடங்களை பா.ஜ.க.விற்கு தாரை வார்த்துள்ளது.
தெலுங்கானாவில் மட்டும் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியை வென்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
3 மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு தி.மு.க. அமைச்சர் உதயநிதியின் சனாதானம் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சுதான் காரணம் என சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது.
இதை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
“சனாதன தர்மத்தை எதிர்த்து தலைவர்கள் பேசியதை காங்கிரஸ் தடுக்க தவறியது. இது தேர்தலில் எதிர்வினை ஆற்றியுள்ளது. அந்த சாபக்கேட்டின் காரணமாக காங்கிரஸ் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. மகாத்மா காந்தியின் கட்சியாக கருதப்பட்ட காங்கிரஸ் சனாதன எதிர்ப்பு கட்சியாக பார்க்கப்பட்டு விட்டது” என காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான ஆசார்ய பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரான தெஹ்சின் பூனாவாலா, “சனாதன தர்மத்தை தரக்குறைவாக பேசியதும் அதை காங்கிரஸ் தடுக்காததும் தவறு. அதனால் காங்கிரஸ் வெற்றியை இழந்தது” என தெரிவித்தார்.
இதே கருத்தை வலியுறுத்தும் விதமாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில், “சனாதனத்தை தரக்குறைவாக பேசினால் அதற்கு எதிர் விளைவுகள் நிச்சயம் இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
தென் மாநிலங்களை காட்டிலும் வட மாநிலங்களில் இந்து மதத்தை உணர்வுபூர்வமாக அணுகும் வழக்கம் உள்ள நிலையில் சனாதனம் குறித்து தி.மு.க.வினரின் நிலைப்பாட்டை காங்கிரஸ் தடுக்க தவறியதால்தான், அதன் தலைவர்களின் தீவிர பிரசாரங்களையும் கடந்து பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதாக சில பயனர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5-மாநில தேர்தல்கள் பார்க்கப்பட்ட நிலையில், 3 மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு கிடைத்துள்ள வெற்றியும், காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள தோல்வியும், கூட்டணிகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.