2018ல் இருந்து இதுவரை வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்- மத்திய மந்திரி தகவல்
1 min read
403 Indian students have died in foreign countries since 2018 – Union Minister informs
8.12.2023
இந்தியாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மேற்படிப்பு படித்து வருகின்றனர்.
இவ்வாறு வெளிநாடுகளில் படித்து வரும் மாணவர்களில் எத்தனை பேர் மரணம் அடைந்துள்ளனர் என்ற புள்ளிவிவர அறிக்கையை மத்திய மந்திரி வி. முரளிதரன் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அதில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை இயற்கையான காரணங்கள் மற்றும் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கனடாவில் 91 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரிட்டனில் 48 பேரும், ரஷியாவில் 40 பேரும், அமெரிக்காவில் 36 பேரும், ஆஸ்திரேலியாவில் 35 பேரும், உக்ரைனில் 21 பேரும், ஜெர்மனியில் 20 பேரும், சைப்ரஸில் 14 பேரும், இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸில் தலா 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதுபற்றி மத்திய மந்திரி முரளிதரன் கூறியதாவது:-
வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு இந்திய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று. மேலும் வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவசர மருத்துவ உதவி, தங்கும் வசதி போன்ற உதவிகள் தேவைப்பட்டால் அவர்கள் முதலில் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். தூதரகம் வழியாக மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு கூறினார்.