தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது
1 min read
Sri Lanka Navy arrested 25 fishermen from Tamil Nadu
10/12/2023
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
வங்க கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது என்பது தொடர் கதையாக இருக்கிறது. இந்நிலையில் இன்று நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 மீனவப் படகுகளையும் படகில் இருந்த 25 மீனவர்களையும் எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன் பிடித்ததாக கூறி பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கைது செய்த மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக கடந்த 7 ஆம் தேதி இராமேஸ்வரம் , புதுக்கோட்டை மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இன்றளவும் விடுவிக்கப்படாத நிலையில் தற்போது தொடர் கைதாக இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. மீனவர்களின் இந்த தொடர் கைது என்பது மீனவ மக்களிடையே கடும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.