மெட்ரோ ரெயிலில் சிக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்
1 min read
Rs 15 lakh relief for the family of the woman who got trapped in the metro train
21.12.2023
டெல்லி இந்திரலோக் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு கடந்த 14-ம் தேதி ரீனா என்பவர் தனது மகனை அழைத்து சென்றார். அங்கு மெட்ரோ ரெயிலில் ரீனா ஏறியுள்ளார். ஆனால் தனது மகன் ரெயிலில் ஏறாததை கண்ட ரீனா ரெயிலில் இருந்து இறங்க முயற்சித்துள்ளார். அதற்குள் ரெயிலின் கதவு மூடியதில் அவரது சேலை சிக்கி நடைமேடையில் இழுத்துச் செல்லப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டார்.
சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். அவருக்கு 13 வயதில் மகள், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவர் இறந்துவிட்டதால் காய்கறி வியாபாரம் செய்து குழந்தைகளை காப்பாற்றி வந்துள்ளார். இச்சம்பவம் பற்றி டெல்லி மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையரகம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் நேற்று கூறியதாவது:-
டெல்லி மெட்ரோ ரயில்வே சட்டம், 2017-ன் படி, விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மனிதாபிமான அடிப்படையில் கூடுதலாக ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ரீனாவின் குழந்தைகள் சிறுவர்களாக இருப்பதால், நிவாரண தொகையை சட்டப்படி அவர்களிடம் ஒப்படைப்பது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரீனாவின் 2 குழந்தைகளின் படிப்பு செலவையும் டெல்லி மெட்ரோ நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும்.
இவ்வாறு டெல்லி மெட்ரோ நிர்வாகம் தொிவித்துள்ளது.