இராமநதி-ஜம்பு நதிமேல்மட்ட கால்வாய் திட்ட பணிகள் விரைவில் துவக்கம்- இராம.உதயசூரியன் தகவல்
1 min read
Ramanadi-Jambu river upper level canal project work to start soon
22.12.2023
தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான இராமநதி ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிகள் விரைவில் துவக்கப்படும் என ராம நதி ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்ட அமைப்பாளர் இராம உதயசூரியன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம். கீழப்பாவூர் கடையம் ஒன்றியங்களின் வறட்சியான பகுதிகள் வளம்பெற இராமநதி அணையின் உபரி நீரை ஜம்பு நதியில் அமைந்துள்ள குத்தாலபேரி. நாராயணபேரி அணைகட்டுகளுக்கு கொண்டு வருவது இராமநதி ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டமாகும். இத்திட்டம் கர்மவீரர் காமராஜர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராக இருந்த 1960-களில் வாக்குறுதி அளிக்கப்பட்டு பின்னர் வந்த காலங்களில் அது நிறைவேறாமல் போனது, 1974ஆம் ஆண்டு இராமநதி அணை முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டபோதும் இத்திட்டம் விடுபட்டுபோனது
சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என அனைவராலும் வலியுறுத்தப்பட்டு வந்த இத்திட்டம் 2015ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் .ஜெ.ஜெயலலிதா 2015 ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் 42 கோடி மதிப்பில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு முதல் கட்டமாக ரூபாய் 5 கோடி நிலம் கையகப்படுத்தவும், ரூபாய் 40 லட்சம் ஆய்வு பணிக்கும் ஒதுக்கப்பட்டு 24.12.2015 அன்று அரசாணை எண் 292 வெளியிடப்பட்டது. அது முதல் ஆய்வு பணிகள் முடிவுற்று 2017 ஆம் ஆண்டு முதல்வர் ஜெ.ஜெயலலிதா நோய்வாய்படுதல் அதன்பின் அவரது மறைவு ஆகியவற்றால் தாமதப்பட்டு வந்த இந்த திட்டத்திற்கு இராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய்திட்ட செயல்பாட்டு குழுவால் முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நில எடுப்பு பணிகள் துவங்கப்பட்டன.
பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் இத்திட்டத்திற்கான மதிப்பீடு 41.08 கோடி என்று திருத்தி அமைக்கப்பட்டு நபார்டு வங்கிக்கு தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டு நபார்டு நிதி 39,02,74,000 -ம் தமிழக அரசு நிதி 2,05,41,000 சேர்த்து 41,08,15,000 நிதி 26.02.2000
அன்று அரசாணை எண் 64 ன்படி கடந்த அதி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்த அரசாணை 10.03.2020 அன்று வெளியிடப்பட்டு அப்பணியும் துவங்கி நடைபெற்று வந்து தற்போது முடிவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 17.31 ஹெக்டேர் நிலத்தில் 14 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தி உரிமையாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது. கடையம் பெரும்பத்து வெங்கடாம்பட்டி கிராமங்களில் நிறைவு பெற்றுள்ள இப்பணி ஆவுடையானூர் கிராமத்தில் 3.20 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணியோடு விரைவில் நிறைவு பெற உள்ளது.கால்வாய் வெட்டும் பணிக்கு 04.06.2020 அன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி 07.08.2020 இத்திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 20.08.2020 அன்று தென்காசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் உறுப்பினர் ஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் பூமி பூஜையுடன் பணி துவங்கியது.
இக்கால்வாய் வரும் பகுதி களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பத்தின் வெளிமண்டல பாதுகாப்பு பகுதியில் வருவதால் வனத்துறையின் தடையின்மை சான்று பெற்று திட்டத்தை தொடருமாறு வனத்துறை இத்திட்டப் பணிகளை நிறுத்திவிட்டது. மேலும் நில உரிமையாளர் களுக்கும் அப்போது இழப்பீடுகள் வழங்காததால் அவர்களும் எதிர்ப்பு தெரிவிக்க திட்டம் நின்று போனது.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொறுப்பேற்ற உடன் இத்திட்டத்தினை தொடர வனத்துறை அனுமதி பெறும் முயற்சியும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வரை ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ எம்பி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததின் விளைவாக மாநில வன உயிரின நலவாரிய குழு மாற்றியமைக்கப்பட்டு அக்குழு கூடி மத்திய வனத்துறைக்கு பரிந்துரைத்தது. மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ நேரிலும் தபால் வழியும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மத்திய வனத்துறை தற்போது அனுமதி வழங்கி கடந்த 11ஆகஸ்ட் 2023 அன்று ஆணை வெளியிட்டுள்ளது.
வனத்துறை அனுமதியும் நில எடுப்பு பணிகளும் நிறைவடைந்து உள்ள நிலையில் இத்திட்டத்தை ஜனவரி மாதத்தில் தொடங்க ஒப்பந்தக்காரர் இசைவு தெரிவித்து கடிதம் வழங்கியுள்ளார்.எனவே மிக நீண்ட காலமாக நம் பகுதி மக்கள் எதிர்பார்த்த இராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் விரைவில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலோடு துவங்க இருக்கும் மகிழ்ச்சியை தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் 25 குளங்கள் நிரம்பி 4050 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. 729 கிணறுகள் செறிவூட்டப்படுகின்றன. கீழப்பாவூர் மற்றும் கடையம் ஒன்றியத்தின் பல நூறு கிராமங்கள் இதனால் பயனடைகிறது.
இத்திட்டம் நிறைவேற துணை நின்ற தி.மு.க.முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் ம.தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராஜேந்திரன் பொதுப்பணித்துறை வருவாய்துறை வனத்துறை ஆகியவற்றின் அனைத்து அதிகாரிகள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி யாளர்கள் என்னோடு துணை நின்ற செயல்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு நீண்ட காலம் எடுத்துக் கொண்டாலும் என்மீது நம்பிக்கை வைத்து போராட்ட முனைகளை. நாடாமல் அமைதிகாத்த அனைத்து அரசியல் கட்சி நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மிக்க நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.