புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்காதது ஏன்?- மு.க.ஸ்டாலின் விளக்கம்
1 min read
I regret not being able to inaugurate the book fair – Chief Minister M. K. Stalin
3.1.2024
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47-வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த புத்தக கண்காட்சி வருகிற 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களில் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக இருந்தது. இந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணங்களால் கண்காட்சியை தொடங்கி வைக்க இயலவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்து இருப்பதாவது:-
சென்னையில் நடைபெறும் 47-வது புத்தக கண்காட்சி பெரும் வெற்றி அடையட்டும். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்றி. கலைஞர் பொற்கிழி விருது, பபாசி விருதுகள் பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள். தவிர்க்க இயலாத காரணங்களால் கண்காட்சியை தொடங்கி வைக்க இயலாததற்கு வருந்துகிறேன்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரூ.6 கோடி செலவில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி வருகிற 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.