சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு
1 min read
Ponmudi appeals against 3-year jail sentence in asset embezzlement case
3.1.2024
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்ச் பொன்முடிக்கும் அவருடைய மனைவிக்கும் சென்னை உயர்நீதி மன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளார். மனுவில் “தண்டனையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியுள்ளார்.
கடந்த 2006 – 2011ஆம் ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
அந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து 2016ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்தது.
அத்துடன், சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து, பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தண்டனையை உடனடியாக நிறுத்தி வைக்கவேண்டும் எனவும் தண்டனையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.