மோசமான நிர்வாகத்தால் சபரிமலை பக்தர்கள் அவதி: பிரதமர் மோடி வேதனை
1 min read
Sabarimala devotees suffer due to bad management: PM Modi anguished
3.1.2024
சபரிமலையில் நடக்கும் மோசமான நிர்வாகத்தால் , பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர். இதுவே மாநில அரசின் இயலாமைக்கு சாட்சி” என திரிச்சூரில் நடந்த பா.ஜ., மகளிர் அணி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
கேரளாவில் மோடி
லட்சத்தீவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கேரளாவின் நெடும்பசேரிக்கு வந்த பிரதமர் மோடிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிறகு அவர் அங்கிருந்து காரில் பேரணியாக சென்றார். வழிநெடுகிலும் மோடியை, பா.ஜ.க. வினர் மலர்தூவி வரவேற்றனர்.
பா.ஜ.க.வின் மகளிர் அணி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-
என்னை வாழ்த்த ஏராளமான பெண்கள் கூடி உள்ளது பெருமை அளிக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு, பெண்கள் சக்தியை, இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு பலவீனமாக கருதியது. இதனால், அக்கட்சிகள், லோக்சபாவிலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தடையை ஏற்படுத்தின.
பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் ஏராளமான திட்டங்களை முன்னெடுத்தோம். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 கோடி காஸ் இணைப்பு வழங்கப்பட்டது. 11 கோடி குடும்பங்களுக்கு குழாய் வழியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
நாட்டில், இன்று பெரிய சாலைகள், நவீன விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், கேரளாவில், மோடி எதிர்ப்பை மட்டுமே கொண்டுள்ள ‛இண்டியா’ கூட்டணி அரசால் எந்த பணிகளும் நடக்கவில்லை. கொள்ளையடிப்பதற்கு கேரளாவில் முழு சுதந்திரம் தேவை என அக்கட்சிகள் நினைக்கின்றன. ஏழை மக்களுக்காகவும், உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகவும் மத்திய அரசு அளிக்கும் நிதி குறித்து கேள்வி கேட்பதை அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் மத்திய அரசின் திட்டங்களை மறைக்க முயற்சி செய்கின்றனர்.
‛இண்டியா’ கூட்டணிக்கு ஒரு விஷயம் தான் தெரியும். அக்கூட்டணியினர் நமது நம்பிக்கையை காயப்படுத்துகின்றனர். நமது கோயில்கள், பண்டிகைகளை கொள்ளையடிப்பதற்கான மையமாக மாற்றியுள்ளனர். இது மாதிரியான அரசியல், ‛திரிச்சூர் பூரம்’ விழாவில் நடப்பது வேதனை அளிக்கிறது.
சபரிமலையில் நடக்கும் மோசமான நிர்வாகத்தால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதுவே மாநில அரசின் இயலாமைக்கு சான்றாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.