சபரிமலையில் மகரஜோதி 3 முறை காட்சியளித்தது
1 min read
Makarajyothi appeared 3 times at Sabarimala
15/1/2024
சபரிமலையில் இன்று (15.1.2024) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு தொடர்ந்து மூன்று முறை காட்சியளித்தது மகரஜோதி. தரிசனம் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை 5:30க்கு சரங்குத்தி வந்தடைந்தது. இங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் சன்னிதானத்துக்கு கொண்டுவரப்பட்டது. மாலை 6:20 மணிக்கு 18ம் படி வழியாக ஸ்ரீ கோயில் முன்புறம் வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து விக்ரகத்தில் ஆபரணங்கள் அணிவித்தனர்.
தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் சன்னிதானத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பொன்னம்பலமேட்டில் மகரநட்சத்திரமும், தொடர்ந்து மகரஜோதி மூன்று முறையும் காட்சி தந்தது. இதனை பார்த்த ஐயப்ப பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர். அப்போது சுவாமியே சரணம் ஐயப்பா என கோஷம் எழுப்பினர்.