ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் மீதாக புகார் குறித்து கருத்துகேட்பு
1 min read
Hearing about the complaint against the Panchayat Chairman of Audaiyanoor
18.1.2024
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சி மன்றத்தலைவர் மீதான முறைகேடு புகார் குறித்து ஆவுடையானூரில் தென்காசி வட்டாட்சியர் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குத்தாலிங்க ராஜன் (எ) கோபி. இவர்மீது ஊராட்சி மன்ற நிதியை கையாள்வதில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக வரப்பட்ட புகார்களின் அடிப்படையில் கடந்த 2023-ஆண்டு அன்றைய வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற கணக்கை ஆய்வு செய்தார். அதில் முறையாக இயங்காத ஒரு தனியார் நிறுவனத்தில் ஊராட்சிக்கு தேவையான சுகாதார பொருட்கள் அளவிட முடியாத பல லட்சங்களுக்கு வாங்கப்பட்டு அந்நிறுவனத்திற்கு ஊராட்சி நிதி வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த மோசடி பற்றியும், இன்னும் பல்வேறு முறைகேடுகள் குறித்தும் வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டதின் விளைவாக ஊராட்சிகள் சட்டம் 205 1 ஏ யின் கீழ் (உங்களை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது என்று) மாவட்ட ஆட்சியரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு பஞ்சாயத்து தலைவரால் கொடுக்கப்பட்ட விளக்கத்தை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொள்ளாத நிலையில், இந்த வழக்கின் அடுத்த நிலையான ஊராட்சி உறுப்பினர்களின் கருத்து அறியும் கருத்து கேட்பு கூட்டம் 19.01.2024 காலை 11-மணிக்கு தென்காசி வட்டாட்சியரால் நடத்தப்பட உள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூறும் கருத்தை அறிந்து ஊராட்சி மன்றத் தலைவர் மீது மேல் நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே மொத்தம் உள்ள 15- ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் 13 உறுப்பினர்கள் முறைகேடுகள் செய்த தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளனர். எனவே இவர்கள் 13 பேரும் தலைவருக்கு எதிராக இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் ஆவுடையானூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சிக்கல் ஏற்படும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.