தேசிய கபடி போட்டி: காளத்தி மடம் ஆட்டோ ஓட்டுனரின் மகள் சாதனை
1 min read
National Kabaddi Tournament: Tenkasi district auto driver’s daughter Athadha
18/1/2024
ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழ்நாடு அணியில் இடம்பெற்று தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை புரிந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஸ்கூல் கேம்ஸ் பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் 67வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகள் கடந்த டிசம்பர் 13ம்தேதி முதல் ஜனவரி8ம் தேதி வரை நடைபெற்றது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், பாக்ஸிங், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல், கூடைப்பந்து, கால்பந்து, ஜூடோ, நீச்சல், ஜிம்னாஸ்டிக், டேபிள் டென்னிஸ், கபாடி, வாலி பால், ஹேண்ட் பால், ரக்பி, கராத்தே, சைக்கிளிங், கிரிக்கெட், ஸ்கேட்டிங் என பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. இதுல் 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் – பெண்கள், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் – பெண்கள், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் – பெண்கள் என பள்ளி மாணவ, மாணவிகள் அணிகள் பங்கேற்று விளையாடின.
தேசிய அளவில் நடந்த இந்த போட்டியின் கபடி போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற தமிழ்நாடு அணியில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடம் பகுதியை சேர்ந்த மாணவி சுஜி மாயிஷா இடபெற்றிருந்தார்.
இவர் காளத்திமடம் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேர்மப்பாண்டி, முத்துக்கனி தம்பதியரின் இரண்டாவது மகள் ஆவார். இவர் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
தமிழ்நாடு கபாடி அணியில் இடம்பெற்று வெற்றி பெற்றது குறித்து மாணவி அஜி மாயிஷா கூறுகையில், சிறுவயதில் இருந்தே கபாடி மீது ஆர்வம் இருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக முறையான கபாடி பயிற்சி பெற்று வருகிறேன். காளத்திமடம் தென்றல் மகளிர் அணிக்காகவும் விளையாடி வருகிறேன். எங்கள் ஊரைச் சேர்ந்த ஆலங்குளம் தலைமைக் காவலர் உதயசூரியன் மற்றும் ஆசீர்ராஜா, மேலாளர் கருணாகரன் ஆகியோரது வழிகாட்டல் மற்றும் பயிற்சியால் தான் என்னால் தமிழ்நாடு அணியில் இடம்பெற்று தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடிந்தது. எனது முயற்சிக்கு பக்கபலமாக இருக்கும் எங்கள் பள்ளிக்கும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தென்காசி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் அருள் இளங்கோவன் அவகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
மாணவியின் தந்தை ஆட்டோ டிரைவர் சேர்மபாண்டி தனது மகளின் சாதனை குறித்து அவர் கூறுகையில், எனது மகள் மாநில அணியில் இடம்பெற்று இந்திய அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் இதுபோல வெற்றி பெற்று ஊருக்கும், மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும். அவளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் உதயசூரியன் மற்றும் பள்ளிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன், என்றார்.