செங்கோட்டை நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
1 min read
The no-confidence motion against Sengottai Municipal Chairman failed
19.1.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் திமுக நகர்மன்ற தலைவர் இராமலெட்சுமி மீது நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நாள் குறித்த நிலையில் தேவையான உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் மொத்தம் 24 நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் அதிமுக 10, திமுக 9, பாஜக 3 காங்கிரஸ் 1, சுயேட்சை 1 நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் செங்கோட்டை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற இராமலட்சுமி அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்களின் ஆதரவுடன் செங்கோட்டை நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு செங்கோட்டை நகர் மன்ற தலைவர் இராமலட்சுமி திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் அன்று முதல் திமுக நகராட்சி தலைவர் இராமலட்சுமிக்கு எதிராக செயல்பட தொடங்கி னார்கள்.ஒவ்வொரு முறை நகர்மன்ற கூட்டம் நடைபெறும் போதும் அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, நகர்மன்ற கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவாக கையெழுத்திடாமல் புறக்கணித்து வந்தனர்.. இதனால் நகர் மன்ற கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கான எந்த தீர்மானமும் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் 8 ஆம் தேதி அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 10 பேர், பாஜக உறுப்பினர்கள் 3 பேர், மற்றும் திமுக உறுப்பினர்கள் 5 பேர், சுயேச்சை உறுப்பினர் ஒருவர் ஆகிய 19 உறுப்பினர்கள் நகர் மன்ற தலைவர் இராமலட்சுமிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நகராட்சி ஆணையாளர் சுகந்தியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதன்படி நேற்று 18.01.2024 காலை 11.30 மணி அளவில் செங்கோட்டை நகர் மன்ற தலைவர் இராமலட்சுமிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் நேற்று காலை முதல் செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்குள் நகர்மன்ற உறுப்பினர் களைத் தவிர பத்திரிகை யாளர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப் படவில்லை. இதனால் செங்கோட்டையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலை 11 மணிக்கு அதிமுக உறுப்பினர்கள் 9 பேர், பாஜக உறுப்பினர்கள் 3 பேர், சுயேச்சை உறுப்பினர் ஒருவர், என 13 நகர் மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்களிக்க தயாராக நகர்மன்ற கூட்ட அரங்கிற்கு வருகை தந்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை 11.30 மணி வரை இந்த 13 உறுப்பினர்களை தவிர திமுக காங்கிரஸ் உள்ளிட்ட 11 நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி கூட்ட அரங்கிற்கு வரவில்லை.
இதனால் செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் சுகந்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு குறைந்தபட்சம் 20 நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் இதுவரை 13 உறுப்பினர்கள் மட்டுமே கூட்ட அரங்கிற்கு வருகை தந்துள்ளனர். எனவே பெருன்பான்மையான கவுன்சிலர்கள் பங்கேற்காததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்படுதாக தெரிவித்தார்.
இதனால் கடும் நெருக்கடியில் செங்கோட்டை நகர்மன்றத் தலைவர் பதவி தப்புமா என்று கேள்விக்குறி எழுந்த நிலையில் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களது கட்சிக் கட்டுப்பாட்டை காப்பாற்றும் வகையில் தலைமையின் உத்தரவுக்கு பணிந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.இதனால் செங்கோட்டை திமுக நகர்மன்ற தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறாமலேயே தோல்வி அடைந்துள்ளது.