அதிமுக உடன் இணைந்து செயல்படும் திமுக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை
1 min read
Complaint that some people are working with AIADMK… DMK warns administrators
27/1/2024
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை, சேலம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கோவை மற்றும் சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொறுப்பு அமைச்சர், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவர்களிடம் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
மேலும் தொகுதியின் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார், தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் பலம், தி.மு.க.வில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது.
இந்நிலையில் சேலம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தொகுதிகளில் தொடர்ச்சியாக அதிமுக வெற்றி பெறுவது எப்படி? என்று சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கேள்வி எழுப்பியது. மேலும்,
- திமுக நிர்வாகிகளுக்குள் நிலவும் போட்டிகளை விட்டு விட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
- இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மாநில உரிமைகளை நாம் பெற முடியும்.
- ஒரு சில திமுக நிர்வாகிகள் அதிமுக உடன் இணைந்து செயல்படுவதாக புகார்… அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்படுங்கள் என்று சேலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவுறுத்தியது.