பா.ஜ., ஆதரவுடன் நாளை முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார் நிதீஷ்குமார்?
1 min read
Will Nitish Kumar take office as Chief Minister tomorrow with the support of BJP?
27.1.2024
பீகார் முதல்வர் நிதீஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொள்வார் எனவும், பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வராக நாளை (ஜன.,28) மீண்டும் பதவியேற்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் பீஹார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதீஷ்குமார் உள்ளார். அவர், மீண்டும் பா.ஜ., கூட்டணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நேற்று கவர்னர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில், நிதீஷ்குமார் மட்டும் பங்கேற்றார். துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ளவில்லை.
இது, இரு கட்சிகளுக்கு இடையே மோதல் இருப்பது உறுதியாகி உள்ளது. மாநிலத்தில் முக்கிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதும் இந்த தகவலை வலுப்படுத்தியது. சட்டசபை கூட்டத்தொடரின் சிறப்பு கூட்டத்திற்கு நாளை நிதீஷ்குமார் அழைப்பு விடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இச்சூழ்நிலையில், நிதீஷ்குமார் நாளை, ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டு பா.ஜ., ஆதரவுடன் முதல்வராக மீண்டும் பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், சட்டசபை கலைக்கப்படாது எனவும், லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக இரு கட்சிகளும், தங்களது எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் கருத்துகளை கேட்டறிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
காரணம் என்ன?
நிதீஷ்குமார் முடிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அவரது கட்சி தலைவர்கள் ஆங்கில மீடியாவிடம் கூறுகையில், ஜன.,13ல் நடந்த இண்டியா கூட்டணி கூட்டம் தான் நிதீஷ்குமார் முடிவுக்கு முக்கிய காரணம். அன்றைய கூட்டத்தில், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு நிதீஷ்குமார் பெயரை கம்யூ., கட்சியின் சீதாராம் யெச்சூரி பரிந்துரை செய்தார். இதனை கூட்டத்தில் பங்கேற்ற லாலு உள்ளிட்ட பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டனர்.
அப்போது தலையிட்ட ராகுல், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு நிதீஷ்குமாரை நியமிப்பதில் மம்தாவுக்கு ஆட்சேபனை உள்ளது. இந்த முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார். இது நிதீஷ்குமாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆலோசனை
இந்நிலையில், பாட்னாவில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தியது. ராகுலின் பாத யாத்திரை மாநிலத்திற்குள் நுழைவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டாலும், மாநில அரசியல் சூழ்நிலை குறித்து பேசப்படலாம் எனத்தெரிகிறது.
அதேபோல், ஆர்ஜேடி எம்.எல்.ஏ.,க்களுடன், தேஜஸ்வி யாதவ் ஆலோசனை நடத்தினார்.
பா.ஜ.,வும், தனது கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தியது. லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், மாநில அரசியல் சூழ்நிலை குறித்து பேசப்படும்.
முன்னதாக, அக்கட்சியின் மாநில தலைவர் சம்ரத் சவுத்ரி, கூட்டணி கட்சியான ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சி தலைவர் ஜிதன் ராம் மஞ்சியை சந்தித்து பேசினார்.
மாநில அரசியல் சூழ்நிலை குறித்து முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி கூறுகையில், அரசியலில் எந்த கதவும் மூடப்படாது ‘ என்றார்.
அதேபோல், டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் ஜேபி நட்டா ஆகியோருடன், லோக்ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் ஆலோசனை நடத்தினார்.
பீஹாரில், அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருவது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
=
பா.ஜ.க. வென்றால் மாநிலம் ‘யூனியன்’ ஆகும்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
திருச்சி,ஜன.28-
திருச்சி மாவட்டம், சிறுகனுாரில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நேற்று மாநாடு நடத்தப்பட்டது.
அம்மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., அம்பேத்கரை உயர்த்தி பிடிக்கும் இயக்கம். அவரை போற்றும் பட்டியலின மக்களை காக்கும் அரசு தி.மு.க., அம்பேத்கர் பிறந்தநாளை, சமத்துவ நாளாக அறிவித்தோம். ஆதி திராவிடர், பழங்குடியின ஆணையத்தை புதுப்பித்து, கூட்டங்களை நடத்தி வருகிறோம். சென்னையில் அயோத்திதாசருக்கு சிலை அமைத்திருக்கிறோம்.
வி.சி.,க்கள் மாநாடு வாயிலாக, ‘வெல்லும் ஜனநாயகம் என்று சொன்னால் மட்டும் போதாது. நாம் அனைவரும் இணைந்து, சர்வாதிகார பா.ஜ., ஆட்சியை துாக்கி எறிய வேண்டும். மத்தியில் ஜனநாயக அரசை கொண்டு வர சபதம் ஏற்றுள்ளோம்.
இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்றும் கடமை நமக்குள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் தனித்தனி அதிகாரம் பெற்றவை என அம்பேத்கர் கூறியிருக்கிறார்.
மாகாணங்களில் தேசிய பண்பு மலர, சுதந்திரமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சொல்லியுள்ளார். இத்தகைய எண்ணம் கொண்ட மத்திய அரசைத்தான் உருவாக்கவேண்டும். அதன் துவக்கமாக பா.ஜ., ஆட்சி அகற்றப்படவேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ., பூஜ்ஜியம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் மட்டும் பா.ஜ.,வை வீழ்த்தினால் போதாது. அகில இந்திய அளவில் வீழ்த்த வேண்டும். அதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் இண்டியா கூட்டணி.
இந்தியாவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற, பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அப்படி வந்து விட்டால், இந்தியாவில் கூட்டாட்சி அமைப்பு இருக்காது; ஜனநாயகம் இருக்காது; மாநிலங்கள் இருக்காது.
மாநிலங்களை மாநகராட்சிகளாக மாற்றி விடுவர். ஜம்மு – காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்கியது போல், யூனியன் பிரதேசங்களாக மாற்றி விடுவர். இதுதான் பா.ஜ., செயல்படுத்தும் சர்வாதிகாரம். அந்த நிலைதான் எல்லா மாநிலங்களுக்கும் ஏற்படும்.
கேள்விகள் இல்லாத பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடத்தப்பட்டுள்ளது. 140 எம்.பி.,க்கள் ‘சஸ்பெண்ட்’ என்பது, உலகின் பெரிய ஜனநாயக நாட்டுக்கு அவமானம். ‘இண்டியா’ கூட்டணி அமைத்தனர்; ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பது வரலாறாக இருக்கவேண்டும்.
சண்டிகர் மாநகர மேயர் தேர்தல் நடக்க இருந்தது. பா.ஜ.,வுக்கு, 15 உறுப்பினர்கள், ஆம் ஆத்மி கட்சிக்கு, 13 பேர், காங்., கட்சிக்கு, ஏழு உறுப்பினர்கள் இருந்தனர். மேயர் பதவியை இண்டியா கூட்டணி கைப்பற்றும் நிலை உருவானது. இதனால் பா.ஜ., தேர்தலை ரத்து செய்துவிட்டது. இத்தகைய சர்வாதிகார போக்கிற்கு முடிவு கட்டவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.