தென்காசியில் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கும் முகாம்
1 min read
Loan assistance camp for entrepreneurs in Tenkasi
24/2/2024
தென்காசியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம், தென்காசி சார்பில் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கும் முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் .கு.பத்மாவதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற
இந்த முகாமில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு வங்கி கிளைகளின் மூலம் 2225 தொழில் முனைவோ ருக்கு ரூ.160.29 கோடி கடனுதவி வழங்கப் பட்டுள்ளது.
மாவட்ட தொழில் மையம் மூலம் 72 பயனாளிகளுக்கு ரூ.6.63 கோடி கடனுதவியும், தாட்கோ மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.44.20 இலட்சம் கடனுதவியும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 19 பயனாளிகளுக்கு ரூ.10.70 இலட்சம் கடனுதவியும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 1 பயனாளிக்கு ரூ.70.00 இலட்சம் கடனுதவியும் இன்று நேரடியாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் 2023-24ம் நிதியாண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 77 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2045.56 கோடி ரூபாய் தென்காசி மாவட்டத்திற்கான கடன் இலக்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை தொழிலுக்கு அடுத்தபடியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சமச்சீர் தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி, கிராமப்புற பொருளாதாரம், கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இவை முக்கிய பங்காற்றுகின்றன.
இன்று நடைபெற்ற கடனுதவி வழங்கும் முகாமில் தென்காசி மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் மற்றும் பொது மேலாளர் .ப.மாரியம்மாள் வரவேற்புரை ஆற்றினார்கள். தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி தலைமை வகித்து சுயவேலைவாய்ப்பு திட்டங்களை பயன்படுத்தி வங்கிகளின் மூலம் மானியத்துடன் கூடிய கடன் பெற்று இளைஞர்கள் அதிக அளவில் தொழில் தொடங்க முன்வருமாறு கேட்டுக் கொண்டார்.
இம்முகாமில் முதன்மை மேலாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகம் கிருஷ்ணன், நபார்டு மேலாளர் பி.சஷிகுமார், முன்னோடி வங்கி மேலாளர் ஏ.கணேசன், தாட்கோ மேலாளர் உ.ரமேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் கே.என்.ஜெயப்பிரகாஷ், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் பா.கணபதி, உதவி இயக்குநர் எம்எஸ்எம்இ ஜி.சிமியோன், தென்காசி எம்எஸ்எம்இ சங்கத் தலைவர் செ.அன்பழகன், தென்காசி ஐ.ஓ.பி. மேலாளர் தியாகராஜன், இந்தியன் வங்கி மேலாளர் வினோத்குமார், கனரா வங்கி மேலாளர் ரமேஷ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் முருகன், ஹெச்டிஎப்சி வங்கி மேலாளர் ஜெபராஜ், பாங்க் ஆப் பரோடா மேலாளர் மணிராஜ், யூனியன் பேங்க் ஆப் இந்தியா மேலாளர் விஷ்ணுகுமார், மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.