புளியரை அருகே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
1 min read
Truck overturns on rail near Puliarai, driver killed
25.2.2024
தமிழக கேரள எல்லையான புளியரை கோட்டை வாசல் பகுதியில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் லாரி டிரைவர் பலியானார். இதனால் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து பிளைவுட் ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி நோக்கி சென்ற லாரி தென்காசி மாவட்டம் புளியரை கோட்டைவாசல் பகுதியில் உள்ள எஸ். வளைவு பகுதியில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சுமார் 100 அடி பள்ளத்தில் இருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்தது.
இதில் லாரி முற்றிலும் சேதம் அடைந்ததோடு லாரி டிரைவர் முக்கூடல் பகுதியைச் சார்ந்த மணிகண்டன் என்பவரது உடல் 3 துண்டுகளாக சிதைந்தது.
இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கேரள மாநிலம் புனலூர் பகவதி அம்மன் கோவில் திருவிழா சிறப்பு ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியைச் சார்ந்த சண்முகையா சுப்பிரமணியன் வடக்கத்தி அம்மாள் ஆகியோர் டார்ச் லைட்டை அடித்து ரயில் டிரைவருக்கு புரியும் வகையில் சிக்னல் கொடுத்தனர்.அதனைப் பார்த்து ஏதோ அசம்பாவிதம் நடைபெற்று உள்ளது என்பதை புரிந்து கொண்ட ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக ரயில்வே துறை மற்றும் காவல்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த ரயில்வே துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் தண்டவாளத்தில் கிடந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புலியரை போலீசார் விபத்தில் சிக்கி உருக்குலைந்த நிலையில் கிடந்த லாரிக்குள் மூன்று துண்டுகளாக கிடந்த லாரி டிரைவர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் அறிந்த செங்கோட்டை ரயில் நிலைய அதிகாரிகள் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் நோக்கி வந்து கொண்டிருந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர்.
இந்த மீட்பு பணிகள் சுமார் 4 மணிநேரம் நீடித்தது. அதன்பிறகு புனலூர் பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்பு ரயில் மற்றும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.
இதனால் அந்த ரயிலில் வந்த பயணிகள் பேரும் சிரமம் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
நள்ளிரவில் எஸ். வளைவு பகுதில் சென்ற லாரி விபத்துக்கு உள்ளான போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து வந்ததோடு அப்போது அந்த வழியாக வந்த ரயிலை தடுத்து நிறுத்தி பெரும் விபத்து நடைபெறாமல் தடுத்த அந்த பகுதியை சேர்ந்த சண்முகையா சுப்பிரமணியன் வடக்கத்தி அம்மாள் ஆகியோருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.