கோட்சேவை புகழ்ந்த பாஜக எம்பி பிரக்யா தாக்கூருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு
1 min read
BJP MP Pragya Thakur, who praised Godse, was denied a chance to contest the elections
3.3.2024
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், போபால் தொகுதி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய பிரக்யா சிங் தாக்கூர், “நான் இதற்கு முன்பும் எம்பி சீட் கேட்கவில்லை, இப்போதும் நான் கேட்கவில்லை. முந்தைய காலத்தில் நான் கூறிய சில வார்த்தைகள் பிரதமர் மோடிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இது குறித்து நான் அவரிடம் மன்னிப்பு கேட்டும், அவர் என்னை மன்னிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தான் உண்மையான தேசபக்தர் என்று பிரக்யா தாகூர் பாராட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல், பாராளுமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை தீவிரவாதி என குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக எம்.பி ரமேஷ் பிதூரிக்கும் மக்களவை வேட்பாளருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.